''பழையபடி
நாங்கள் வாழவும் முடியாது; நீங்கள் ஆளவும் முடியாது!'' என்பதை அரசு
மற்றும் அதிகார வர்க்கத்திற்கு செயல்பூர்வமாக உணர்த்தியுள்ளனர், கோவை
முஸ்லிம்கள்.
நடைபெற்று
முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் கோவையில் உள்ள அனைத்து முஸ்லிம்
ஜமாஅத்துகள் மற்றும் அமைப்புகள் ஒன்றிணைந்து மேயர் பதவிக்கு ஒரு பொது
வேட்பாளரை நிறுத்தினர். மேயர் வேட்பாளராக கோவை மாவட்ட ஐக்கிய ஜமாஅத் தலைவர்
அமீர் அல்தாப் போட்டியிட்டார். ஆளும் கட்சியான அதிமுக கோவை மாநகராட்சியை
கைப்பற்ற; பிரதானக் கட்சியான திமுக இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட; முஸ்லிம்
கூட்டமைப்பின் வேட்பாளர் அமீர் அல்தாப் மூன்றாவது இடத்தைப்
பிடித்துள்ளார். அதிமுக மற்றும் திமுகவுக்கு அடுத்து மூன்றாவது பெரிய
சக்தியாக முஸ்லிம் கூட்டமைப்பு விளங்குகிறது எனும் பேருண்மையை கோவை தேர்தல்
முடிவுகள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன.
கொள்கைப்
பிரிவினைகள்; இயக்க வேறுபாடுகள்; கட்சிப் பாகுபாடுகள் என பிரிவினைகளில்
மூழ்கி மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகம், கருத்து
முரண்பாடுகளையும் வேற்றுமைகளையும் கடந்து கோவையில் மட்டும் எப்படி ஒன்று
பட்டது என்பதையும்; காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தேமுதிக, பாமக, பாஜக, கொங்கு
வேளாளர் கட்சி ஆகிய முக்கிய கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளும் அளவுக்கு
முஸ்லிம் கூட்டமைப்பின் வேட்பாளர் அமீர் அல்தாப் வலிமை பெற்றது எப்படி
என்பதையும் நாம் ஆய்வு செய்தாக வேண்டும்.
கோவை
மாநகராட்சியில் மொத்தம் 72 வார்டுகள் இருந்தன. மாநகராட்சி எல்லை
விரிவாக்கம் மற்றும் வார்டுகள் மறு சீரமைப்பு நடவடிக்கையில் அவை 100
வார்டுகளாக அதிகரிக்கப் பட்டன. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் 37,38,39,40
ஆகிய நான்கு வார்டுகள் இரண்டாகக் குறைக்கப் பட்டன.
கோவை
மாநகராட்சியுடன் குறிச்சி மற்றும் குனியமுத்தூர் 3 ஆம் நிலை நகராட்சிகள்
இணைக்கப்பட்டு, குறிச்சி நகராட்சியின் 1,2 ,6 ஆவது வார்டுகள்
மாநகராட்சியின் 95 ஆவது வார்டாகவும், குனியமுத்தூர் நகராட்சியின் 1,2 ,21
ஆவது வார்டுகள் மாநகராட்சியின் 87 ஆவது வார்டாகவும் மாற்றியமைக்கப் பட்டன.
மேலும் இவ்விரு வார்டுகளும் தாழ்த்தப்பட்ட மகளிருக்கான தனித்
தொகுதிகளாகவும் அறிவிக்கப் பட்டன.
காலங்காலமாக
முஸ்லிம்கள் மட்டுமே போட்டியிட்டு வென்ற வார்டுகளையும், முஸ்லிம்
வாக்காளர்களை பெரும்பான்மையாகக் கொண்ட பகுதிகளையும் மறு சீரமைப்பு என்ற
பெயரில் குறித்தும், சிதறடித்தும், பழ கூறுகளாகப் பிரித்தும்,
தலித்துகளுக்கான தொகுதிகளாக அறிவித்தும் அக்கிரமம் செய்துள்ளது அதிகார
வர்க்கம்.
முஸ்லிம்களிடம்
மிஞ்சியிருக்கும் கொஞ்ச நஞ்ச அதிகாரத்தையும் அபகரிக்கும் வகையில் கரம்
கோர்த்து இயங்கும் தேர்தல் ஆணையம் மற்றும் அரசுக்கு எதிராக கொந்தளித்துக்
கிளம்பினர் கோவை முஸ்லிம்கள். முஸ்லிம் அமைப்புகள் மற்றும் கட்சிகளின்
சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. எனினும் முஸ்லிம்களின்
நியாயமான கோரிக்கைகளையும், உரிமைக்கான குரலையும் அரசு கண்டு கொள்ளவே இல்லை.
அரசின் அலட்சியம் முஸ்லிம்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கோவையிலுள்ள 150 முஸ்லிம் ஜமாத்துகளும் ஒன்றிணைந்து
ஒரு பள்ளிவாசலில் கூடி அப்பள்ளிவாசல் இமாமின் தலைமையில் ஆலோசனையில்
ஈடுபட்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முஸ்லிம்களில் அனைத்துத்
தரப்பினரும் பங்கேற்றனர்.
முஸ்லிம்
பிரதிநிதித்துவத்தை இல்லாமல் ஆக்கும் வகையில் தலித்துகளுக்கான தொகுதிகளாக
அறிவிக்கப்பட்ட 87 மற்றும் 95 ஆவது வார்டு கவுன்சிலர் தேர்தலை முஸ்லிம்கள்
புறக்கணிப்பது என்றும், முஸ்லிம்களின் வலிமையை உணர்த்தும் வகையிலும்;
அரசியல் கட்சிகளுக்கு பாடம் புகட்டும் வகையிலும் மாநகராட்சி மேயர்
வேட்பாளராக கோவை மாவட்ட ஐக்கிய ஜமாஅத் தலைவர் அமீர் அல்தாபை நிறுத்துவது
என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டது. முஸ்லிம்களின் இந்த ஒன்றுபட்ட
எழுச்சி கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது; ஊடகங்களில் முக்கிய
செய்தியாகியது; அரசியல் கட்சிகளை கலக்கமடையச் செய்தது.
வேட்பு
மனுத் தாக்கல் செய்வதற்கு ஒரே ஒரு நாள் மட்டுமே அவகாசம் இருந்த நிலையில்
பணிகள் அனைத்தும் முடுக்கி விடப்பட்டன. முஸ்லிம் அமைப்புகள், சங்கங்கள்,
கட்சிகள், ஜமாத்துகள் அனைவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து களத்தில்
இணைந்தனர். சமுதாயத்தின் மானத்தை காப்பாற்றியே ஆக வேண்டும் எனும்
வேட்கையுடன் பம்பரமாய் சுழன்றனர். ஒவ்வொரு இயக்கத்திலிருந்தும் ஒரு
பிரதிநிதி என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு தேர்தல் பணிக்குழுக்கள்
அமைக்கப்பட்டன. குறுகிய கால அவகாசத்தில் நிறைவாகத் திட்டமிட்டு தேர்தலை
எதிர்கொண்டு ஆயிரக்கணக்கான வாக்குகளைப் பெற்று அதிமுக மற்றும் திமுகவை
அடுத்த மூன்றாவது பெரிய இடத்தைப் பிடித்து வரலாற்றுச் சாதனையை
நிகழ்த்தியுள்ளனர்.
தொகுதி
மறுசீரமைப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் நிறைந்து வாழும் தொகுதிகளை
இல்லாமல் ஆக்குவது என்பது கோவையில் மட்டும் நிகழ்ந்தது அல்ல. அது தமிழகம்
முழுவதும் நடைபெற்று வரும் ஒரு தொடர் நிகழ்வு. அப்படியிருக்க மாநில அளவில்
முஸ்லிம்களிடம் ஏற்பட்டிருக்க வேண்டிய ஒரு கிளர்ச்சி, கோவை என்கிற மாவட்ட
அளவில் மட்டும் சுருங்கிப் போனது ஏன் என்பதற்கு நாம் முதலில் விடை கண்டாக
வேண்டும்.
மாநில
அளவில் கட்சிகளை வைத்துக் கொண்டு சமுதாயத்திற்கு தலைமைப்
பொறுப்பேற்றிருக்கும் தலைவர்கள் முஸ்லிம்களின் அடிப்படைப் பிரச்சனைகளில்
போதிய அக்கறையின்றி; தொலைநோக்குப் பார்வை இன்றி; பரந்த உள்ளமின்றி;
விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கின்றி குறுகிய எண்ணப் போக்குடன் செயல்படுவதன்
விளைவாகவே மாநில அளவிலான முஸ்லிம்களின் ஒன்றுதிரள் சாத்தியமற்றதாகி
வருகிறது.
ஆனால்,
தலைவர்களின் போக்கில் சமுதாயம் இல்லை என்பதை பட்டவர்த்தனமாக
வெளிப்படுத்தியுள்ளது கோவை முஸ்லிம்களின் திரட்சி. அங்கு 150 ஜமாத்துகளும்
பள்ளிவாசலில் ஒன்று கூடி மிகப்பெரும் அரசியல் முடிவை எடுக்கிற போது, சமுதாய
அமைப்புகள் மற்றும் கட்சிகளால் அதைப் புறக்கணிக்க முடியவில்லை.
ஜமாத்துகளின் நிலைப்பாட்டை ஆதரித்து, தம்மையும் சமுதாயத்தின் ஓர் அங்கம்
என்று காட்டிக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு அமைப்புகள் தள்ளப்பட்டன.
மாநில அளவில் தலைவர்கள் ஒன்றிணைந்து செய்ய வேண்டிய ஒரு மாபெரும் செயலை
மாவட்ட அளவில் முஸ்லிம்கள் தன்னெழுச்சியாய் திரண்டு செய்து காட்டியுள்ளனர்.
அந்தத் தலைவர்களின் கீழ் இயங்கும் அமைப்புகளையும் தம்மை ஆதரித்தே ஆக
வேண்டிய நிலைக்கு கொண்டு வந்துள்ளனர். கோவையைப் பின்பற்றி இனி ஒவ்வொரு
மாவட்ட ஜமாத்துகளும் இப்படித் திரண்டால் தமிழகம் தழுவிய அளவில் மிகப்பெரும்
மாற்றம் நிகழும்.
முஸ்லிம்கள்
அதிகம் வாழும் தொகுதிகள், தொகுதி மறுசீரமைப்பில் தலித்துகள் மட்டுமே
போட்டியிடக்கூடிய தனித் தொகுதிகளாக மாற்றப் படுகின்றன. இது அதிகார
வர்க்கத்தின் திட்டமிட்ட சதி நடவடிக்கையாகும். இந்துத்துவத்தால் பாதிக்கப்
படுகின்ற தலித் மற்றும் முஸ்லிம் சமூகத்திற்கு இடையே பகை நெருப்பை பற்ற
வைக்கவும், இரு சமூகங்களும் இந்துத்துவ எதிர்ப்பு எனும் கருத்தியலின்
அடிப்படையில் ஒன்றிணைந்து விடாமல் தடுக்கவும் அதிகாரவர்க்கம் கூர்மையாக
இயங்குகிறது.
கடலூர்
மாவட்டத்தில் முஸ்லிம்கள் நிறைந்து வாழும் நெல்லிக்குப்பம் நகராட்சியை
தலித்துகளுக்கான தொகுதியாக மாற்றியமைத்த உடன் அதை மீண்டும் பொதுத்
தொகுதியாக மாற்றக் கோரி நெல்லிக்குப்பம் முஸ்லிம்கள் போராட்டத்தில்
இறங்கினர். உடனே அப்பிரச்சனையில் மூக்கை நுழைத்த இந்து
முன்னணித் தலைவர் இராம கோபாலன், முஸ்லிம்களின் உரிமைக்கான போராட்டத்தை
தலித் எதிர்ப்பு போராட்டமாக சித்தரித்தார். முஸ்லிம்கள் தலித்துகளுக்கு
கேடயமல்ல; கேடு என கருத்துரைத்தார். இரு சமூகங்களுக்கு இடையில் பகையை
மூட்டும் அவரது அறிக்கை ஊடகங்களில் பிரதானமாக வெளியிடப்பட்டிருந்தது. இதன்
மூலம் தமிழகம் முழுவதும் அந்த துவேஷக் கருத்து பற்றிப் பரவியது. அதே
வேளையில்தான் கோவையிலும் முஸ்லிம் தொகுதிகள் தனித் தொகுதிகளாக
மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம்கள் களத்திற்கு வந்த ஒரு
நிகழ்வும் நடந்தது.
இத்தகைய
ஒரு பதற்றச் சூழலில் கோவை முஸ்லிம்கள் கையாண்ட ஓர் உத்தி மிகவும்
போற்றத்தக்கது. தலித்துகளின் மிகப்பெரும் தலைவராக அடையாளப் பட்டிருக்கும்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை கோவைக்கு
வரவழைத்து, ஒரு நாள் முழுவதும் அவர் முஸ்லிம் கூட்டமைப்பின் வேட்பாளர்
அமீர் அல்தாபை ஆதரித்து பரப்புரை செய்யும் வகையில் பிரச்சாரப் பயணத்தை
திட்டமிட்டனர்.
திருமா
வந்தார்; மேயர் வேட்பாளரான அமீர் அல்தாபுடன் தமது கட்சியின் சார்பில்
கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஒரே இடத்தில் நிறுத்தி
புகைப்படம் எடுத்து அது ஊடகங்களில் மிகப்பெரும் செய்தியாக வருவதற்கு வழி
செய்தார். முஸ்லிம்கள் நிறைந்து வாழும் பகுதிகளை தலித்துகள் மட்டுமே
போட்டியிடும் தொகுதிகளாக மாற்றுவது முஸ்லிம்களின் உரிமைகளைப் பறிக்கும்
செயல் என பேசினார். அமீர் அல்தாபை ஆதரித்து கோவை வீதிகளில் பேசிய ஒரே
அரசியல் தலைவர் திருமா தான் என்பது குறிப்பிடத் தக்கது. இத்தகைய ஒரு
இணக்கமான சூழல் கோவையில் ஏற்பட வழிவகுத்த கோவை ஐக்கிய ஜமாத்தையும், அந்த
நல்லிணக்கம் தமிழகம் தழுவிய அளவில் ஏற்பட பெரு முயற்சி எடுத்த எஸ்.டி.பி.ஐ
கட்சியையையும் இந்த நேரத்தில் பாராட்ட வேண்டும்.
முஸ்லிம்
வாக்கு வங்கியை சிந்தாமல் சிதறாமல் ஒருமுகப்படுத்துவதன் மூலமே பொதுச்
சமூகத்தில் நமக்கான மரியாதையைப் பெற முடியும் என்பதற்கு கோவை மாநகர மேயர்
தேர்தல் முடிவுகள் மிகப்பெரும் சான்றாக விளங்குகின்றன.
கோவையைப்
போலவே பதற்றம் நிறைந்த பகுதியாக இருக்கும் முத்துப்பேட்டையில்
பேரூராட்சித் தலைவருக்கான தேர்தலில் சமுதாயக் கட்சிகளான இந்திய யூனியன்
முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ ஆகிய கட்சிகள்
போட்டியிட்டுள்ளன. முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியில் முஸ்லிம் கட்சிகள்
தனித் தனியே நின்று வாக்குகளைப் பிரித்ததனால் அங்கு அதிமுக எளிதாக வெற்றி
பெற்று விட்டது. அதிமுக வேட்பாளரான கோ.அருணாசலம் 2310 வாக்குகளைப் பெற்று
பேரூராட்சித் தலைவராகி விட்டார். சமுதாயக் கட்சியான எஸ்.டி.பி.ஐ யின்
வேட்பாளர் அபுபக்கர் சித்திக் 1926 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப்
பிடித்துள்ளார். சமுதாயக் கட்சிகளிலேயே நாங்கள் தான் பெரிய கட்சி என்று
சொல்லிக் கொள்ளும் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் செ.முஹம்மது மாலிக்
வெறும் 395 வாக்குகளை மட்டுமே பெற்று ஆறாவது இடத்திற்கு தள்ளப்
பட்டுள்ளார்.
அதிமுகவை
சார்ந்த முஸ்லிம் அல்லாத வேட்பாளரான கோ.அருணாசலம், எஸ்.டி.பி.ஐ வேட்பாளரான
அபூபக்கர் சித்தீக்கை விட வெறும் 384 வாக்குகளே அதிகம் பெற்று வெற்றி
பெற்றுள்ள நிலையில், சமுதாயக் கட்சியான மமக மட்டும் போட்டியிடாமல்
எஸ்.டி.பி.ஐக்கு ஆதரவு தெரிவித்திருந்தால், அதன் வேட்பாளர் பெற்ற 395
வாக்குகளையும் எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் கூடுதலாகப் பெற்று ஒரு முஸ்லிம்
முத்துப்பேட்டை பேரூராட்சித் தலைவர் ஆகியிருப்பார். ஆக, இந்துத்துவ
சக்திகளாலும் அவர்களுக்குத் துணை போகின்ற அனைத்து அரசியல் கட்சிகளாலும்
தொடர்ந்து பிரச்சனைகளை சந்தித்து வருகின்ற முத்துப்பேட்டையில் பேரூராட்சித்
தலைவராக ஒரு முஸ்லிம் வரமுடியாத சூழல் முஸ்லிம்களாலேயே ஏற்பட்டுள்ளது.
எஸ்.டி.பி.ஐ
கட்சிக்கும் மனிதநேய மக்கள் கட்சிக்கும் இடையே ஓர் புரிந்துணர்வு
ஏற்படாமல் போனதற்கு எஸ்.டி.பி.ஐயே காரணம் என சொல்லப்படுகிறது. கடந்த சட்ட
மன்றத் தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் தமுமுக தலைவர் பேராசிரியர்
எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அதிமுக கூட்டணி வேட்பாளராகப் போட்டியிட்ட போது,
அங்கே ஏற்கனவே தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்த எஸ்.டி.பி.ஐ கட்சி தமது
வேட்பாளரை வாபஸ் வாங்கவில்லை. கூட்டணி பலத்தோடு போட்டியிட்ட
பேரா.ஜவாஹிருல்லாஹ் நிச்சயம் வெற்றி பெறுவார் என்ற நிலையில், தம்
கட்சியின் வேட்பாளர் வெல்வதற்கு வாய்ப்பே இல்லை என்பது நன்கு தெரிந்த
பின்னரும் கூட எஸ்.டி.பி.ஐ பிடிவாதமாக அங்கே வேட்புமனுத் தாக்கல் செய்தது.
இது இரு கட்சிகளிடையே நல்லிணக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பை கெடுத்து
விட்டது.
இவ்வாறு
முஸ்லிம் கட்சிகள் ஒன்றுக்கொன்று முட்டிக் கொண்டு மோதிக் கொண்டு
இருந்தால், அது நம்மை காலங்காலமாக வஞ்சித்து வரும் அரசியல்
கட்சிகளுக்குத்தான் லாபமாக முடியும் என்பதை முத்துப்பேட்டை தேர்தல்
முடிவும்; நாம் ஒன்றுபட்டு நின்றால் நமக்கான அங்கீகாரத்தைப் பெற முடியும்
என்பதை கோவைத் தேர்தல் முடிவும் எடுத்துக் காட்டுகின்றன.
முஸ்லிம்கள்
தமது வலிமையை வெளிக்காட்டுவதற்கு காலம் வழங்கிய கொடையாக இந்த உள்ளாட்சித்
தேர்தல் வாய்த்திருந்தது. அனைத்துக் கட்சிகளும் தனித் தனியே களம் கண்ட
நிலையில் முஸ்லிம்கள் மட்டும் தமிழகம் முழுவதும் ஒன்று பட்டு
நின்றிருந்தால் இன்று அரசியல் அரங்கில் அது மிகப்பெரும் தாக்கத்தை
ஏற்படுத்தியிருக்கும்.
தமிழகத்தில்
அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியிட்டு தோல்வியை மட்டுமே தொடர்ந்து
பெற்றுக் கொண்டிருக்கும் பாரதீய ஜனதா கட்சி இந்த உள்ளாட்சித் தேர்தலில் சில
நகராட்சிகளையும், மிகப்பெரும் எண்ணிக்கையில் பேரூராட்சிகளையும்
கைப்பற்றியுள்ளது. பாஜகவுக்கு செல்வாக்கு உள்ள பகுதிகளில் இந்துக்களின்
ஓட்டுக்களை ஒருமுகப் படுத்தியதன் மூலமும், பாஜகவை எதிர்த்து இன்னொரு
இந்துக் கட்சி போட்டியிடாததாலும் அவர்களுக்கு இந்த வெற்றி
சாத்தியமாகியுள்ளது. பாஜகவின் இந்த உத்தியை மாநிலம் தழுவிய முஸ்லிம்
கட்சிகள் கையாளத் தவறிய நிலையில் கோவை முஸ்லிம்கள் மட்டும் அதை கையாண்டு
சமுதாயத்திற்கு தலை நிமிர்வைத் தந்துள்ளனர்.
முஸ்லிம்களை
அரசியல் மயப்படுத்த வேண்டுமெனில், முதலில் ஜமாத்துகள் அரசியல் மயப்பட
வேண்டும். ஒவ்வொரு பள்ளிவாசலிலும் அரசியல் விழிப்புணர்வுக் கருத்துகள்
பேசப்பட வேண்டும். அரசியல் விழிப்புணர்வுக்கான களமாக முஹல்லாக்களும்,
வெள்ளி மேடைகளும் மாறாத வரை முஸ்லிம்களின் வாழ்க்கையிலும் மாற்றம் வராது.
கோவையில்
மேயர் வேட்பாளர் அமீர் அல்தாபுக்கு வாக்களிக்கச் சொல்லி 150
ஜமாத்துகளிலும், அனைத்துப் பள்ளிவாசல் ஜும்மாக்களிலும் உரை நிகழ்த்தப்
பட்டன. அமீர் அல்தாபுக்கு ஆதரவு தெரிவித்து ஜமாத்துல் உலமா நிறைவேற்றிய
தீர்மானம் வாசிக்கப்பட்டன. அவரது வெற்றிக்காக பிராத்தனைகள் செய்யப்பட்டன.
சுவர்
விளம்பரங்கள்; பேனர்கள்; போஸ்டர்கள் என விளம்பரங்கள் செய்து,
வாக்காளர்களுக்கு பணமும் பரிசுப் பொருள்களும் கொடுத்து அரசியல் கட்சிகள்
பரப்புரையில் ஈடுபட்ட போது, அது போன்ற எவ்வித செயல்களிலும் ஈடுபடாமல்
சமுதாய ஒற்றுமையை மட்டுமே முதலீடாகக் கொண்டு களத்தில் நின்றார் அமீர்
அல்தாப்.
பெரிய
கட்சிகளின் விளப்ம்பர வெளிச்சத்திற்கு மத்தியில் எவ்வித ஆர்ப்பாட்டமும்
இல்லாமல் களம் கண்ட அமீர் அல்தாபுக்கு வெள்ளி மேடைகள் தான் பிரச்சாரக்
களமாக இருந்தன. அதுதான் இவ்வளவு பெரிய வாக்குகள் திரள்வதற்கு காரணமாகவும்
இருந்துள்ளன.
ஒட்டுமொத்த
ஜமாத்துகளையும் ஒருங்கிணைத்தது; அனைத்து முஸ்லிம் அமைப்புகள் மற்றும்
கட்சிகளின் ஆதரவை வென்றெடுத்தது; தலித் தலைமையின் தோழமையைப் பெற்றது;
பள்ளிவாசல்கலையே பிரச்சாரக் களமாக்கி, வெள்ளி மேடைகளில் பரப்புரை செய்தது;
கொள்கைப் பிரிவினைகளுக்குள் சிக்காத - அனைத்துத் தரப்பினரின் நன்மதிப்பை
பெற்ற ஒரு போது வேட்பாளரை நிறுத்தியது; தமது ஒற்றுமையின் மூலம் அரசுக்கும்,
அரசியல் கட்சிகளுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் சரியான பாடம் புகட்டியது
என.... கோவை முஸ்லிம்கள் ஒரு புதிய விடியலுக்கு வழியமைத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் அது விரிந்து பரவுவது நம் கைகளிலேயே உள்ளது.
[சமநிலைச் சமுதாயம் நவம்பர்-2011 இதழில், ஆளூர் ஷாநவாஸ் எழுதிய கட்டுரை.]
No comments:
Post a Comment